Sunday, January 8, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நண்ணுதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  நண்ணுதல்

வார்த்தைநண்ணுதல்
பொருள்

·         கிட்டுதல்
·         பொருந்துதல்
·         செய்தல்
·         இருத்தல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
புண்ணியம் செய்தனமே-மனமே!- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
*நண்ணி* இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

அபிராமி அந்தாதி

புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே, புதிதாக மலர்ந்த குவளை மலர்களைப் போன்ற கண்களை உடைய அபிராமி அன்னை, அவளது கணவராகிய, சிவந்த திருமேனியை உடைய சிவபெருமான் இருவரும் நம்மைப் போன்ற அடியவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்து, நமது தலைகளின்மீது தங்களுடைய தாமரைப் பாதங்களைப் பதித்து அருள் புரிவதற்காக இங்கே வந்து குடிகொண்டிருக்கிறார்கள்.

2.
கண்நுதல் கரும்பே நின்முனம் நீல
          கண்டம்என் றோதுதல் மறந்தே
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல்
          உன்முனம் நின்றனன் அதனால்
*நண்ணுதல்* பொருட்டோர் நான்முகன் மாயோன்
          நாடிட அடியர்தம் உள்ளத்
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

திருவருட்பா - திருவருட்பிரகாச வள்ளலார்

கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போன்ற சிவனே, உன்னுடைய திருமுன்னர் நின்று நீலகண்டம் என்று ஓதுவதை மறந்து உண்டற்கொருப்பட்டு அமர்ந்து உண்டு பின்னர் ஒதி மரம்போல உன் முன்னே வந்து நின்ற காரணத்தால் உன்னுடைய திருமுடியையும் திருவடியையும் கண்டு உன்னை அடைதற் பொருட்டு நான்முகனும் நாரணனும் தேடி அயரவும், அடியார்களின் உள்ளத்தில் குளிர்ச்சியுண்டாகக் கலந்து கொண்ட உன்னால் திருவொற்றியூரில் நன்கு தண்டிக்கப்பட்டேன்.


No comments:

Post a Comment