Monday, March 30, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – ஓணகாந்தன்தளி


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - ஓணகாந்தன்தளி

அமைவிடம் - பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்
இறைவன்  - சுயம்பு மூர்த்தி
சுந்தரரும், இறைவனில் திருவடி தரிசனமும்
ஓங்கார கணபதி விக்ரகத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி.
அசுரர்களின் தலைவன் வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளில் ஒருவனான ஓணன்,  சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தனது ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்ற இடம்.
மற்றொரு சேனாதிபதி காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்ற இடம்.
ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட இடம்.

அசுரர்களின் பத்தி கண்டு சுந்தரர் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டு இறைவனை பொன், பொருள் வேண்டி பாட, அருகில் உள்ள புளிய மரம் பொன் காய்களாக மாறிய இடம்


தலம்
ஓணகாந்தன்தளி
பிற பெயர்கள்
திருவோணகாந்தன் தளி
இறைவன்
ஓணகாந்தேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
வன்னி மரம்/புளிய மரம்
தீர்த்தம்
ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
விழாக்கள்
மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை,
காஞ்சிபுரம்- 631 502.
91- 98944 43108
வழிபட்டவர்கள்
ஓணன், காந்தன், சலந்தரன்.
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 235 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   3 வது தலம்.

ஜலந்தேஸ்வரர்


ஒணகாந்தேஸ்வரர்


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               1

பாடல்

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே.

பொருள்

திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே, 'நெய், பால், தயிர்’ கொண்டு உன்னை வழிபடுபவர்களின் கைகளில் பொருள் ஒன்றும் காணப்படுவது இல்லை. ஐந்து எண்ணிக்கை பற்றி நிற்கும் புலன்களால் ஆட்பட்டு, வருத்தமுற்று அச் சுழற்சியினால் அந்த துன்ப குழியில் விழுந்து, அதில் இருந்து விடுபட முழியாமல் அழுந்திப் போகும் எனக்கு உமது கழல் அணிந்த திருவடிகளைத் தொழுது பொருள் பெற்று மட்டுமே விடுபட முடியும்.அவ்வாறு அத்துன்பத்தில் இருந்து விடுபட எனக்கு வழி ஒன்றை சொல்வீராக.

கருத்து
ஐவர்  - பஞ்ச இந்திரியங்களும் அவற்றால் செய்யப்படும் தொழில்களும்
துய்ய – தூய்மையான

தம்பிரான் தோழர் என்பதாலேயே தனது நிலையையும், தன் சார்ந்து இருப்பவர்ளின் வறுமை நிலையையும் சொல்லி பொருள் கேட்டு விழைகிறார்.


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               2

பாடல்

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொருள்

திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே,  'நீர் பிறை இருக்குமாறு கட்டிய சடையை உடையவர், அலைகள் தோன்றும் புரளும் கங்கை, உமா தேவிக்கு அஞ்சி என்றும் வாய் திறவாதவள். மூத்த குமாரராகிய கணபதி, வயிறு ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். இளைய குமாரகிய வேலை உடைய குமரன் விளையாட்டுப் பிள்ளை. உமாதேவி உம்மை விடுத்து அடியவர்களை ஆட்கொள்ள மாட்டார். ஆதலால் உங்கள் குடிக்கு அடிமைத் தொழில் செய்ய மாட்டோம்.

கருத்து

இது இறைவனின் திருமேனி வடிவங்களயும், திரு மேனியோடு இருக்கும் உமை, கணபதி மற்றும் குமரனின் வடிவம் குறித்திப் பேசுகிறது.

நன்றி - புகைப்படம் : தினமலர்