Showing posts with label பாடல் பெற்றத் தலங்கள். Show all posts
Showing posts with label பாடல் பெற்றத் தலங்கள். Show all posts

Wednesday, June 8, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅரசிலி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅரசிலி

·   அரச மரத்தை இறைவன் வீடாக கொண்டமையால் திருஅரசிலி(திரு+அரசு+இல்)
·   ருத்ராட்ச பந்தலின் கீழ் மூலவர் சிறிய பாணம், தாழ்வான ஆவுடையார்; தலையில் அம்பு பட்ட தழும்பு
·   மகர தோரணத்தில் தட்சிணாமூர்த்தி காலடியில் உள்ள முயலகன் இடதுபுறம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தவாறு காட்சி
·   வாம தேவர் எனும் முனிவருக்கு அரச மரத்தடியில் சுயம்புவாக காட்சி கொடுத்து சாபம்  விலக்கிய திருத்தலம்.
·   சத்திய விரதன் எனும் மன்னனுக்கு புத்திர பாக்யம் தருவதற்காக மான் வடிவில் காட்சி தந்து, அம்பு வாங்கி,  பின் மறைந்து லிங்க வடிவ காட்சி கொடுத்த இடம்.
·   வடிவமைப்பு -  சாளுவ மன்னன்



தலம்
திரு அரசிலி
பிற பெயர்கள்
ஒழுந்தியாப்பட்டு
இறைவன்
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
இறைவி
பெரியநாயகி ( அழகியநாயகி )
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
விழாக்கள்
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு - அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 - 235472,295376, 9994476960
வழிபட்டவர்கள்
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
பாடியவர்கள்
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்

திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு

திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ

திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.

அரசலீஸ்வரர்


பெரியநாயகி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   8            

பாடல்

வண்ண மால்வரை தன்னை
     மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
     நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
     பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
     அடிகளுக் கிடமர சிலியே.          


பொருள்

தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட  முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

கருத்து

வண்ணமால்வரை-கயிலைமலை.
இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.


பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   9            

பாடல்

குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே. 

பொருள்

குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம்அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

கருத்து

குறிய மாணுரு-வாமனாவதாரம்
வெறி-மணம்.
மெய்த்தவத்தோன்-பிரமன்.
செறிவு ஒணா-செறிதல் ஒன்றா.
செறிதல்-பொருந்துதல்.
அறிவொணாவுருவம்-ஐம்பொறிகளாலும், மனதாலும் அறிய இயலா ஞானசொரூபம்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Tuesday, May 10, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை

·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை - வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது



தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604304
தொலைபேசி : 9443251012, +91 - 413 - 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை - திண்டிவனம் - கூட்டேரிப்பட்டு - மயிலம் - பெரும்பாக்கம் – திருவக்கரை

சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.

சந்திர மௌலீசுவரர்


அமிர்தேசுவரி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         

பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

பொருள்

அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.

கருத்து

·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         

பாடல்

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.

பொருள்

அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்

கருத்து
·         ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமே - உன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்



Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே


(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)



Monday, May 2, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –

இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்"  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்

தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்


மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.

ஆட்சீஸ்வரர்


இளங்கிளி அம்மை


புகைப்படம் : தினமலர்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         

பாடல்

கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


பொருள்

இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்



பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  

பாடல்

நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்

அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.

கருத்து

·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.

·         நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள்