Friday, January 6, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தழல்



ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தழல்

வார்த்தைதழல்
பொருள்

·         நெருப்பு
·         தணல்
·         கார்த்திகை நட்சத்திரம்
·         நஞ்சு
·         கொடு வேலி
·         கவண்
·         சங்ககாலத்தில் காதலன் தன் காதலிக்குத் தரும் விளையாட்டுக் கருவி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- *தழல்*
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

மகாகவி பாரதியார்

2.
கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், `நண்ணுதற்கு அரிய
விமலனே, எமக்கு வெளிப்படாய்' என்ன, வியன் *தழல்* வெளிப்பட்ட எந்தாய்!
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?' என்று, அருளாயே!

திருவாசகம் - மாணிக்கவாசகர்

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்m கார்மேகம் போன்ற நிறத்தை யுடைய திருமாலும் அடைவதற்கு அருமையான  தூயவனே,  எங்களுக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்ட பெரிய அழலுருவத்திலிருந்து  தோன்றிய  எந்தையே;  பேரொலியையுடைய  நான்கு வேதங்களும் பயில்கின்ற  திருப்பெருந்துறையின்கண்  செழுமையான மலர்களையுடைய  குருந்தமர நிழலைப் பொருந்திய  சிறப்புடைய  அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

3.
தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி *தழலுருவாஞ்* சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

தேவாரம் - 4ம் திருமுறை - திருநாவுக்கரசர்


தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய், செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் .

No comments:

Post a Comment