Thursday, January 5, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தையலார்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தையலார்

வார்த்தைதையலார்
பொருள்

  • ·         மாதர்கள்
  • ·         எப்போதும் ஒப்பனையோடிருப்பவர்கள்
  • ·         பெண்களின் தலைவி (தையல் நாயகி)


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
*தையலார்* மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

திருவாசகம் - மாணிக்க வாசகர்

பெண்கள் மயக்கத்தில் தாழ்ந்து விழக் கூடிவனாகிய என்னை, மெல்லக் கொண்டுவந்து பாசம் என்கிற தாழைக் கழற்றி, உய்யும் வழியைக் காட்டி, ஓங்காரப் பொருளையும் எனக்கு அருள் செய்தான். அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

2.
     அரியது நினது திருஅருள் ஒன்றே
          அவ்வருள் அடைதலே எவைக்கும்
     பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப்
          பேய்களை ஆயிரம் கூட்டிச்
     சரிஎனச் சொலினும் போதுறா மடமைத்
          *தையலார்* மையலில் அழுந்திப்
     பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப்
          பெருமநின் அருளெனக் குண்டே.

திரு அருட்பா

திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, நின்னுடைய திருவருள் ஒன்றே அரிய பொருள்; அதனை எய்துவதே பெறப்படும் பொருள்கள் எல்லாவற்றிலும் பெரியதொரு பேறு என்பதை உணராமல், திருந்தாத் தன்மையுடைய ஆயிரம் பேய்களை ஒன்று சேர்த்து உருவாக்கின் ஒரு பெண்ணுக்கு நிகராமெனச் சொல்லின் அதுவும் நிரம்பாது என்னும் அளவு மடமைமிக்க மகளிரின் மயக்கத்தில் மூழ்கி விருப்புற்று ஏழையாகிய யான் அலைந்து வருந்தினேன்; இத்தகைய எனக்கு நின்னுடைய அருள் கிடைக்குமோ? அறியேன்.

3.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் *தையலார்* கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் - திருஞானசம்பந்தர்


பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

No comments:

Post a Comment