Monday, January 2, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெருட்சி

ஓவியம் : இணையம்


அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெருட்சி

வார்த்தை :  தெருட்சி
பொருள்
  • ·         அறிவு
  • ·         தெளிவு
  • ·         கன்னி ருது


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
    விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
    வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
    சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.

திரு அருட்பா, 2ம் திருமுறை

திருவொற்றியூரில் மேவும் உலகுடைய பெருமானே, வெருட்சியை உண்டுபண்ணும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை ஆதலால் வினையையுடையனாகிய எனது உள்ளம் மருண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னிடம் அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் உய்யப் பெறுவேன்; அவ்வாறு கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

2.
மன்னும்பதி கம்அது பாடியபின்
   வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
   அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
    திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
   முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே

பெரிய புராணம் - சேக்கிழார்


நிலைபெறும் அப்பதிகத்தை திருநாவுக்கரசர் அருளிய பின்பு, அவரது வயிற்றில் தங்கி வருத்திய கொடிய சூலை நோயும் அக்கணமே நீங்கிடவும், சிறப்பென்னும் செம்பொருளான சிவ பெருமானின் திருநிறைந்த அருளைப் பெறுதற்கான சிறப்புடைய நாயனார், பொருந்தி நின்ற ஞான மயக்கத்தால் இறைவரின் அருள் ஆகிய கடலுள் மூழ்கி நின்றார்.

No comments:

Post a Comment