Saturday, December 21, 2013

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி - வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் - வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் - மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் - பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா - உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் - இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது - கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே - இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் - அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே - காதற்ற ஊசியும்..... வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் - அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் - இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் - வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி - ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் - செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து - ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் - கோழி பெண்).
வல்வினை நோய் -  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி - ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் - அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.


Friday, December 20, 2013

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும்

கந்தர் அலங்காரம்

கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.

காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.

கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.






நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி

நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.

திருவருள் முன்னின்று நிற்கட்டும்.

Saturday, December 14, 2013

மார்கழிக் கோலம்

மார்கழிக் கோலம் எதற்கு.

ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.

அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.

2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.

3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ - கோல நடுவில்)

Click by : Gayu Venkat

Thursday, December 5, 2013

மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.



மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் - எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே - பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் - என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் - இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் - செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் - பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.

Saturday, November 16, 2013

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!


விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் - இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் - ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

Friday, October 11, 2013

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை - அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திர்களாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது. 

Thursday, October 10, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள் - 4

துக்கடா..
நண்பன் 1 : நான் இன்றைக்கு உன்னிடம் விவாதிக்க வந்திருக்கிறேன்.
நண்பன் 2 : எதைப் பற்றி?
நண்பன் 1 : கடவுள் உண்டா இல்லையா என்று?.
நண்பன் 2 : சரிடா. உன் பெயர் என்ன.
நண்பன் 1 : கணபதி.
நண்பன் 2 : ஆங்கிலத்தில் எப்படி எழுதுவாய்.
நண்பன் 1 :  ganappathi
நண்பன் 2 : பேர் ஏண்டா 37ல வரமாதிரி வச்சிருக்க.
நண்பன் 1 : நான் உங்கிட்ட அப்புறமா பேசறேன்.

*****
திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்துள் மறைந்து பார்முதல் பூதம்.

ஒரு அழகான யானை இருகிறது. சில நேரம் கழித்து அது யானை அல்ல சிலை என்ற உணர்வு வருகிறது. அது எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது மறைந்துவிடுகிறது. அழகான யானை என்பதே நினைவில் நிற்கிறது. அதைப்போலவே தனித்தன்மையான ஒப்புவுயர்வு அற்ற என்ற பொருள்படும் பரம் என்பதை பூதங்கள்(பஞ்சேந்திரியங்கள்)  மறைத்துவிடுகின்றன. அவைகளுக்குள்ளும் பரம் என்பது நிறைந்திருகிறது.

முடிவுரை 1 :
கண்டவர், விண்டிலர்..
விண்டவர் கண்டிலர்.
முடிவுரை 2:
இறை அனுபவம் அறியக் கூடியது அல்ல. உணரக் கூடியது.

கடவுட் கொள்கை - வாதங்கள்-3 
கடவுட் கொள்கை - வாதங்கள்-2
கடவுட் கொள்கை - வாதங்கள்-1


Friday, October 4, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-3

கதை - 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.

குரு         : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.

குரு         : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ......

குரு         : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன்  : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.

குரு         : ஏன்?

மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு         : நீயே என் பிரதான சீடன்.

எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.

ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு

2907 -
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும்  அனைத்தும் 'அவன்' என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.

பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)

இதை சிறிது விளக்க முற்படுவோம்.

நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.

சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.

மீண்டும் தொடர்வோம்.

கடவுட் கொள்கை - வாதங்கள் -2
கடவுட் கொள்கை - வாதங்கள் -1 

Tuesday, October 1, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-2

இக்கட்டுரையின் படி இரு பிரிவுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. கடவுள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதில் முக்கியமாக உலகாதாயம் (சார்வாகம்) மட்டும் விவாதப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பிரிவுகளான ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுவும் தவிர வேத தரிசனங்களான நியாயம் ,வைசேடிகம் , சாங்கியம்,யோகம்,மீமாம்சை (பூர்வ மீமாம்சை),வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆகியவைகளைப் பற்றிய விவாதங்களும் இதில் இல்லை.

மனிதன் 1 : நீ யார்?
மனிதன் 2 : மனிதன்
மனிதன் 1 : நீ எந்த கொள்கையை உடையவன்.
மனிதன் 2 : கடவுள் மறுப்புக் கொள்கை என்பதே என் நோக்கம்.
மனிதன் 1 : எதை வைத்து இக் கொள்கையை கூறுகிறாய்.
மனிதன் 2 : கடவுள் யாவருக்கும் பொது தானே.
மனிதன் 1 : ஆமாம்.
மனிதன் 2 : அப்படி எனில் நீ கண்ட கடவுளை நானும் காண வேண்டும் தானே.
மனிதன் 1 : மௌனம்...
மனிதன் 2 : என்ன பதில் இல்லையா?
மனிதன் 1 : டெல்லி சென்றிருக்கிறாயா?
மனிதன் 2 : இல்லை.
மனிதன் 1 : நீ போகவே இல்லை. கண்ணால் கண்டதும் இல்லை. ஆனால் டெல்லி என்றொரு இடம் இருப்பதை எப்படி நம்புகிறாய்.
மனிதன் 2 : மௌனம்...
மனிதன் 1 : யோசித்து பதில் அளி. அவசரம் இல்லை.

*************************************************************
குழந்தை : என்ன அப்பா இந்த புத்தகம்.
தந்தை    : இது முப்பரிமாண புகைப்படங்கள் கொண்ட புத்தகம்.
குழந்தை : அப்படீன்னா,
தந்தை    : இந்த புகைப்படத்தை எல்லாம் உற்று கவனித்தால் ஒரு படம் தெரியும்.
குழந்தை : எப்படி
தந்தை    : இந்த படத்தை கண்ணுக்கு சிறிது தூரத்தில் வைத்துக் கொள். உற்று கவனி.
குழந்தை : சரி.
தந்தை    : என்ன தெரிகிறது?
குழந்தை : மேஜையும் அதில் பூச்செண்டும்.
தந்தை    : மிகச் சரி.
நண்பர்    : என்னடா ஒன்னும் தெரியல.
தந்தை    : நீதானட, கண்ணால் காண்பது மெய் என்று சொன்னாய். அப்புறம் ஏன் உனக்கு தெரியல.

கடவுட் கொள்கை - வாதங்கள்-1

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Monday, September 30, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் - 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை -  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் - கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் - ஏன்?
முடி திருத்துபவர் - ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் - மௌனம்.
முடி திருத்துபவர் -  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் - நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் - சரி.
வாடிக்கையாளர் - இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் - எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் - அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை -  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Wednesday, September 11, 2013

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

ஆன்மீகம் - முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல.  ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.

அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.

2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.

மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.

Friday, September 6, 2013

குடிப் பிறப்பு

நான்மணிக்கடிகை  - நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்;   மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?

பொருள் அனைவரும் அறிந்ததே.

கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.

எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.

Saturday, July 27, 2013

இறைவழிபாட்டில் வாசனை மலர்களும் வாசனைப் பொருள்களும்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?

ஆன்மீகம் -  இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.

அறிவியல் - மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.

முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

Thursday, July 18, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Saturday, July 13, 2013

பெண் - இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் 'இன்னொன்றை எடுத்து வந்து இடுக'.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் - திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.


புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். 'அப்படி எனில் மற்றொன்றை இடுக'.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது 'மற்றொன்றை இடுக' என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

Tuesday, July 2, 2013

குடிப்பிறப்பு

மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை.

குட்டி  'அம்மா, ஒரு கத சொல்லேன்'

அம்மா  'அன்னைக்கு ஒடினல, இப்ப ஏன் கத கேக்கற'

குட்டி  'சரிம்மா.  ஒரு டாக் கத, ஒரு எலிஃப்னெட் கத சொல்லு'

அம்மா  'ஒரு ஊர்ல ஒரு ரிஷி இருந்தாராம்.

குட்டி  'பெரிய தாடி வச்சிகிட்டா?'

அம்மா  'குறுக்க பேசாத,அவர்கிட்ட ஒரு நாய் இருந்துதாம்'

குட்டி  'ஜிம்மி மாதிரியா'

அம்மா  'குறுக்க பேசாத, பேசினா கத சொல்ல மாட்டேன்'

குட்டி  'சரி'

அம்மா  'நாய் ரொம்ம சாதுவாம். சமத்தா சாப்பிடுமாம், சமத்தா தூங்குமாம். அவருகிட்கவே இருக்குமாம்'

குட்டி  'ம்'

அம்மா  'ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும்  அப்டின்னு சொல்லுச்சாம்'

குட்டி  'ம்'

அம்மா  'அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்'

குட்டி  'ம்'

அம்மா  'வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்'

குட்டி  'ம்'

அம்மா  'இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம்.
அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ' நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது'
உடனே ரிஷி மேல பாய போச்சாம்.
ரிஷி சொன்னாராம், ' உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ'

அதற்குள் குட்டி உறங்கி இருந்தாள்.

ரிஷி - அக்னிப்ரபர்

Friday, June 28, 2013

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் -  தலைவர்  சூப்பர் ஸ்டார்)

Photo : Internet

Thursday, June 27, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.

சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். 

பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.

தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.

பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை. 

பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும்.  அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.

Wednesday, June 26, 2013

சோம்பல் தவிர்

மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை - தற்கால வடிவங்களுடன்.

குட்டி -  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா - 'ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா'

குட்டி - 'ம்'

அம்மா - 'அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்'

குட்டி - 'என்னான்னு'

அம்மா - 'நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்'

குட்டி - 'அது எப்படி'

அம்மா - 'அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்'

குட்டி - 'ரொம்ப ஜாலி இல்ல'

அம்மா - 'கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்'.

குட்டி - 'ம்'

அம்மா - 'அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்'

குட்டி - 'நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா'

அம்மா - 'அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி - 'ம்'

அம்மா - 'அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்'

குட்டி - 'ஏன் ஒட்டகம் ஓடலையா'

அம்மா - 'சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற'

குட்டி - 'விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு'


Tuesday, June 25, 2013

பெண் - இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் - புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் - மனைவி, பரமாத்மா - ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. 'சிவாயா நம'

காரைக்கால் அம்மையார்,'திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்'

சிவனடியார் - 'மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்'.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

Thursday, June 20, 2013

அக்னி

யயாதி என்றொரு மன்னன் இருந்தான். அவன் நகுஷனின் புத்திரன்.

அவன் மக்களின் சந்தோஷம் முதன்மையானது என்று ஆட்சி செய்தான்.அவனுக்கு 5 புதல்வர்கள்.

பல வருடங்கள் ஆட்சி செய்தப்பின் ரூபத்தை அழிப்பதும், மிக்க துன்பத்தை தரத்தக்கதுமான முதுமையை அடைந்தான்.

அவன் தனது புதல்வர்களை அழைத்து தான் இளமையோடு இருக்க விருப்புவதாக கூறினான். 

புதல்வர்கள் இதனால் 'தங்களுக்கு என்ன பயன்' என்று கேட்டார்கள்.

'எனது முதுமையை வாங்கிக் கொள்வர்கள் அரசாட்சி செய்யலாம்' என்றான்.
மகன்கள் விரும்பவில்லை.

பூரூ என்ற மகன் 'தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்' என்றான்.

பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. 'காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்'.

மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.

காமியார்த்தமாக சொன்னால் - பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.

ஆத்மார்த்தமாக சொன்னால் - சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.

Wednesday, June 19, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் - 'சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்' என்ற தலைப்பில் வரும்.

ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.

காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.

காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்

குரோதம்: கோபம்

லோபம்: பேராசை

மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.

மாத்ஸர்யம்: பொறாமை

மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

'செம்புல பெயல் நீர் போல்' என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.

Tuesday, June 18, 2013

பெண் - இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி - புரு - மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.


இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட 'இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்' என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் - என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் 'அம்மா' என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo - Shivam

Saturday, June 15, 2013

வளையல் காப்பு

வளையல் காப்பு அணிவிப்பது எதனால்?

ஆன்மீகம் - குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.

அறிவியல் - குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் -  அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.


Friday, June 14, 2013

மொட்டை அடித்தல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?

ஆன்மீகம் - தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.

அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும்.  வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர் கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.

Wednesday, June 12, 2013

சைவ சித்தாந்தம்

உடம்பு அழியக்கூடியது. (தேகம்) - எனில் அதைப் பகுக்க முடியுமா?

ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும்.  எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.

அப்படி எனில் மனத்தின் வேலை எது -
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.

மனம்  - நினைக்கும்.
புத்தி  - விசாரிக்கும்.
சித்தம்  - நிச்சயிக்கும்.
அகங்காரம் - துணியும்.

எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

அது போலவே 'நான்' தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Tuesday, June 11, 2013

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 - 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.



பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image - Internet

Monday, June 10, 2013

சூடம் காட்டுதல்

குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்?

ஆன்மீகம் - திருட்டி கழியும்.

அறிவியல் - அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.

Sunday, June 9, 2013

கருடனின் பிறப்பு - 2

பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.

'என்ன வேண்டும்' - கத்ரு

'என் தாய் விடுதலை' - கருடன்
'அது இயலாது' - கத்ரு

'அது நிகழ என்ன செய்யவேண்டும்' - கருடன்

'தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்' - கத்ரு

பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.

கத்ரு, 'அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா'

கருடன், 'ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், '

கத்ரு,' வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு'
கருடன்,'அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல' என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.

பெரிய திருவடி போற்றி,போற்றி

Saturday, June 8, 2013

தேடல்

தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் - இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)

1.அனுபவம்
2.அனுமானம்
3.ஆப்தவாக்கியம்.

1.அனுபவம் - தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)

2.அனுமானம் - பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)

3.ஆப்தவாக்கியம் - விவரம் அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது. (அங்க வாங்கு, நிச்சயம் விலை மலிவு)

தேடுதலைத் தொடர்வோம்..

Friday, June 7, 2013

தடுமாற்றம்

வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?

ஆன்மீகம் - போகும் காரியத்தில் தடங்கல் வரும்.

அறிவியல் - தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.

Thursday, June 6, 2013

கருடனின் பிறப்பு - 1

கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் - மூலம் - மகாபாரதம் - M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு - நாகங்களின் தாய்
வினதை - அருணன் மற்றும் கருடனின் தாய்.

ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.

அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.

அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் 'வால் கருப்பாக தெரியும் 'என்றும், 'நான் ஜெயித்து விடுவேன்' என்றும் உரைக்கிறாள். நாகங்கள் 'நீ தவறு செய்கிறாய்' என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.

வினதை  அடிமையாகி விடுகிறாள்.

அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். 'அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்' என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)

Wednesday, June 5, 2013

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் - சிந்தனை

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் - என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், 'பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் 'பதி' குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.

எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.

பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் - திருமந்திரம் - உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )

நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)

அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து          - அழியாதது.
அ - சித்து  - அழியக் கூடியது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Tuesday, June 4, 2013

வடக்கில் தலை வைத்து உறங்குதல்

வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில்  வைத்து உறங்குதல் கூடாது?

ஆன்மீகம் - கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.

அறிவியல் - உடல் முழுவதும்,  தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும்.  தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.

Image - Internet

Saturday, June 1, 2013

தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?

தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?

ஆன்மீகம்
மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.

அறிவியல்
1. The Density for Gold is - 19.3 g. The electrical conductivity of silver at 293°K is 62.9e6 (1/Ωcm); the conductivity of gold is only 48.7e6 (1/Ωcm) (in both cases, e is being used as the ten's exponent). That means Silver is a better conductivity than Gold. 



2. புவி ஈர்ப்பு ஆற்றலுக்கு எதிராக செயல்பட தங்கத்திற்கு ஆற்றல் குறைவு. அது உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

3. கீழே விழுந்தால் தெரியாது. பொருளாதார இழப்பு.


Image - Internet

Friday, May 31, 2013

கோயிலை வலம் வருதல்

பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?

ஆன்மீகம் - எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.

அறிவியல் -
1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல்  அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும்.
2.
முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.

3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.

Saturday, May 25, 2013

காதல் = பக்தி இலக்கியம்

காதலில் பல வகைகள் உண்டு.  பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன.
தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.

திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் 
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன.
தோழியினடத்தில் கேட்கிறாள்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் -  முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள்.
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  - அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் - அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் - பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.

இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் 'கேட்கிறாள்'.'கேட்கிறாள்'  என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு  வேலையைச் செய்கின்றன்.
காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். 'நீத்தாள்' - மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் - மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)

எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள்.
தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.


அவனது தாளை சரணடைந்தாள்.
வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.

Sunday, May 19, 2013

சைவ சித்தாந்தம்


சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.

சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.





த்வைதம் - இருமைப்பற்றி பேசும்
அத்வைதம் -  -ஒருமைப்பற்றி பேசும்
விசிஷ்டாத்வதம் -  இருமை ஒன்றாதல் பற்றி பேசும்
சைவம் - மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்

பதி - இறைவன்
பசு - உயிர்கள்
பாசம் - இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.

ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும்
(காணாபத்தியம் - கணபதி முதன்மை,
கௌமாரம் - முருகன் முதன்மை,
சௌரம் - சூரியன்
சைவம் - சிவன் முதன்மை,
வைஷ்ணவம் - விஷ்ணு முதன்மை,
சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.

இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் - என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி - பதி.

Saturday, May 18, 2013

விபூதி தயாரிக்கும் முறை


விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி)
1. கற்ப விதி
2. அனுகற்ப விதி
3. உப கற்ப விதி

1. கற்ப விதி
பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.


2. அனுகற்ப விதி
காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.

3. உப கற்ப விதி
காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.


பலன்கள்.
தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும்.
அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில் தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)

Saturday, April 27, 2013

கிரகணம்


கிரகணத்திற்கு சில மணி நேரத்திற்கு (3 - 4 நேரம்) முன் உணவு உட் கொள்ளவேண்டும்.

கிரகண காலத்தில் உணவு செரித்தல் குறைவாகக் கூடும்.

மேலும் கிரகண காலத்தில் கண்ணுக்கு தெரியாத புழுதிப் படலம் எற்படும். அது உணவுகளில் மீது படியும். அது மிகப் பெரிய உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கிரகணத்திற்கு பின் வீட்டினை சுத்தப்படுத்துதல் இதன் பொருட்டே.

Friday, March 22, 2013

மருத்துவர்களின் குறியீடு


மருத்துவர்களின் குறியீடு இது.

பழங்கால குறியீடு இது. இது சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த சூரிய கலை, சந்திர கலை இரண்டும் 6 இடங்களில் சேரும். அதுவே ஆறு ஆதாரங்கள்.

மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞா

எல்லா இடங்களுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. குரு முகமாக மேலும் விவரங்களை அறியவும்.

Tuesday, March 12, 2013

செவ்வாய் தோஷம்


பெரும்பாலான பெற்றோர்கள் பயம் கொள்ளும் விஷயம் செவ்வாய் தோஷம்.

அறிவியல் பூர்வமான உண்மைகள்.

செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் உடலில் சூடு அதிகம் இருக்கும். மற்றவர் செவ்வாய் தோஷம் அற்றவராக இருந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பு கடினமாகும். இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பின் குழந்தை பிறப்பினில் குறை இருக்காது.

இது என் வரையினில் உணரப்பட்ட விஷயம்.