Wednesday, November 12, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்



  பஞ்சபூத தலங்களில் – பிருத்வி - நிலம்
  மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் கிடையது
  இறைவி கம்பை மாநதியில் நீர் பெருக்கெடுத்து வந்ததால் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டதால் தழுவக் குழைந்தநாதர்
  சிவன் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் அணிந்திருக்கிறார்
  பிரகாரத்தில் பிரம்மா பூசித்த இலிங்கம் - வெள்ளக்கம்பம், விஷ்ணு பூசித்த இலிங்கம் - கள்ளக் கம்பம், உருத்திரர் பூசித்த இலிங்கம் -  கள்ளக் கம்பம்
  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, இத் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது.
  இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை கொடுத்தருளிய தலம்.
  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம்
  சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
  தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
  ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்கள் பிரகாரத்தில்
  கச்சியப்ப சிவாச்சாரியார்  "கந்த புராணத்தை' இயற்றிய தலம்.
  கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னால் உள்ளது.
  172 அடி உயரமுள்ள இராஜகோபுரம்

இத்தலத்தைப்பற்றிய நூல்கள்

·திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் - காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர்  - காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர் - கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூது,
·இரட்டையர்கள் -  ஏகாம்பர நாதர் உலா
·பட்டினத்துப்பிள்ளையார் - திருவேகம்ப முடையார் திருவந்தாதி,
·மாதவச்சிவஞான யோகிகள் - ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர், ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி

சிறப்பு செய்யும் நூல்கள்
மணிமேகலை,  
தக்கயாகப் பரணி
மத்தவிலாசப்பிரகசனம் 
தண்டியலங்காரம்
பன்னிரு திருமுறைகள்


தலம்
ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்
பிற பெயர்கள்
திருக்கச்சியேகம்பம்
இறைவன்
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
இறைவி
ஏலவார்குழலி
தல விருட்சம்
மாமரம்
தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
விழாக்கள்
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
வழிபட்டவர்கள்
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் - 7 பதிகங்கள்,  ,  சுந்தரர் - 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   1 வது தலம்.

*சில நூல்களிலும் வலைத்தளங்களிலும் மாணிக்கவாசகர் பாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்க வாசகரின் பாடல் வரிகளில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளதே தவிர தனி பாடல் இல்லை.


ஏலவார் குழலம்மை உடனாகிய  ஏகாம்பரேஸ்வரர் 



பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    2 ம் திருமுறை 
பதிக எண்                   12
திருமுறை எண்              8

பாடல்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

பொருள்

தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.


கருத்து

சர்வஞ்ஞத்வம் குற்றம் அற்றவனும், அனைத்தையும் இயக்கும் வல்லமை உடையவன் என்ற சைவசித்தாந்த கருத்து சிந்திக்கக்கூடியது.

ரென்றலை மேலாரே - என்னால் வணங்கப்படுவர்கள் எனும் பொருளில்



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    61
திருமுறை எண்               1

பாடல்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

பொருள்

பாற்கடல் கடையும் பொழுது அதில் வந்த நஞ்சினை விரும்பி உண்டவனும் அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனும், எல்லோருக்கும் முதல்வனாக இருப்பவனும், தேவர்களால் துதிக்கப்படும் பெருமை உடையவனும், நினைப்பவர்கள் நினைவில் உள்ளவனும், நீண்ட கூந்தலை உடைய உமையால் தினமும் துதிக்கப்படுபவனும், காலங்களுக்கு முடிவானவனாகவும் ஆகிய எம்மானை காண அடியேன் கண் பெற்றவாறே.

கருத்து

'வியப்பு' என்பது சொல்லெச்சம்
'சீலம்' என்பது  குணம்

புகைப்படம் : தினமலர்

No comments:

Post a Comment