Sunday, November 22, 2015

ஆதி சித்தனின் அரங்கேற்றம்


நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.

விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.


மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Thursday, November 19, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருகுரங்கணில் முட்டம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருகுரங்கணில் முட்டம்

இறைவன் சுயம்பு மூர்த்தி
வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
விஷ்ணு துர்க்கை - வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே மகிஷாசுரனும் அற்று.

சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது



தலம்
திருகுரங்கணில் முட்டம்
பிற பெயர்கள்
கொய்யாமலை
இறைவன்
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர், திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்
இறைவி
இறையார் வளையம்மை, இளையாளம்மன், ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தல விருட்சம்
இலந்தை மரம்
தீர்த்தம்
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் – 631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419
வழிபட்டவர்கள்
வாலி, இந்திரன், யமன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 238 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   6 வது தலம்.

வாலீஸ்வரர்




இறையார் வளையம்மை




பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        8    

பாடல்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.


பொருள்

மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய  நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும். அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்

கருத்து

மையார்மேனி - கரியமேனி.
அரக்கன் - இராவணன். .
கொய் ஆர் மலர் - கொய்தலைப் பொருந்திய மலர்.


பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        9    


பாடல்

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.

பொருள்

மணம் உடைய தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும் அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.

கருத்து

அறியாது அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த - பின்னர் அறிந்து துதிக்க
ஓர் ஆர் - தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி - தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்

புகைப்படம் : தினமலர்

Wednesday, November 11, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி


மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

வடிவம்(பொது)

·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி'
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  - சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி -  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.

வேறு பெயர்கள்

·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் - ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  -  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்

இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்

Thursday, November 5, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கச்சூர்

இறைவன் சுயம்பு மூர்த்தி
பாற்கடல் கடையும் பொழுது, விஷ்ணு (கச்சபம்) ஆமையாக உருவெடுத்து இத்தலத்து சிவனை பூஜை செய்து மந்தார மலையை தாங்கும் வலிமை பெற்ற தலம்.
இறைவனின் திருப்பாதங்கள் படிந்த தலம்
இந்திரனின் சாபம் நீங்க அஸ்வினி தேவர்களுக்கு மருந்து காட்டிய இடம்(மருந்தீஸ்வரர்)
சரியான மருந்தை ஒளி மூலம் காட்டிக் கொடுத்தமையினால் இருள்நீக்கி அம்பாள்.
சுந்தரரின் பசிப் பிணி போக்குவதற்காக சிவன் முதியவர் வேடம் கொண்டு (இரந்து) பிச்சை ஏற்று அவருக்கு அளித்ததால் இரந்தீஸ்வரர்
விருந்து படைத்ததால் விருந்தீஸ்வர்
நான்கு முகங்களுடன் சண்டேஸ்வரர் - சதுர்முக சண்டேசுவரர்
உபயவிட தலங்களில் ஒன்று

கஜ பிருஷ்ட விமானம்


கச்சபேஸ்வரர்



அஞ்சனாட்சி



தலம்
திருக்கச்சூர்
பிற பெயர்கள்
நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில், ஔஷத கிரி, கச்சபவூர்
இறைவன்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், அமிர்த தியாகராஜர்
இறைவி
அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி,
தல விருட்சம்
கல்லால மரம், வேர்ப்பலா
தீர்த்தம்
ஔஷதி தீர்த்தம், கூர்ம தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை,மாசி - பிரம்மோற்ஸவம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை
மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 - 9 மணி வரை மட்டும்

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 44 - 2746 4325,2746 3514,2723 3384, திரு. முரளி - +91 94453 56399
வழிபட்டவர்கள்
திருமால்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 258 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   26 வது தலம்.

பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7
பதிக எண்                    41
திருமுறை எண்               7

பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

பொருள்

மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.

கருத்து
பொய்யே உன்னைப் புகழ்வார் - மனதில் அன்பு இன்றி பலன் கருதி புகழ்தல். இது இழிநிலை மனிதர்களுக்கு உரியது. அந்த நிலையில் இருந்தாலும் கூட  என்பதே இதன் சிறப்பு

சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
1.பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
2.செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே
வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்


பாடியவர்                  சுந்தரர் 
திருமுறை                 7 
பதிக எண்                 41   
திருமுறை எண்            8  

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.

பொருள்

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே,ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

கருத்து

செடியேன் உணர்வில்லேன் - செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உணர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

புகைப்படம் : தினமலர்