Thursday, August 13, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇலம்பையங்கோட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருஇலம்பையங்கோட்டூர்

மூலவர் தீண்டாத் திருமேனி; சுயம்பு மூர்த்தி; கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி
சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறம். பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பு
கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு
தலவிநாயகர் -  குறுந்த விநாயகர், சுத்தான்னம் நைவேத்தியம்
வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி ஈசனை பூஜிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகில் வரும் போது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்துதல், உடன் வந்த அடியார்களளின் அறியாமை, பின் இறைவனே  வெள்ளைப் பசு வடிவில் வந்து திருஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல,தலத்தினருகில் வந்ததும் பசு மறைதல்.
அரம்பை வழிபட்டத் தலம் - ரம்பையங்கோட்டூர் –இலம்பையங்கோட்டூர்

இலம்பை -  நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை


தலம்
திருஇலம்பையங்கோட்டூர்
பிற பெயர்கள்
எலுமியன்கோட்டூர், அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
இறைவன்
அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். ரம்பாபுரிநாதர்
இறைவி
கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள்,
தல விருட்சம்
மல்லிகை.
தீர்த்தம்
சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
விழாக்கள்
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,
திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 -44 - 2769 2412, 09444865714, 9444429775
வழிபட்டவர்கள்
அரம்பை, சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 246 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   13 வது தலம்.

தெய்வநாயகேஸ்வரர்



கனககுஜாம்பிகை





பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           3    

பாடல்

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்,
      பண்டுவெங்கூற்றுதைத்து  அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி
      அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்
      குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப்
      பேணி என்எழில் கொள்வதியல்பே.

பொருள்

சிவன் பாலன், முதியவர் மற்றும்  பசுபதி என்று பல வடிவங்கள் எடுத்து வந்தவன். அவன் கொடுமையான கூற்றுவனை காலால் உதைத்து அடியவர்களுக்கு அருளுபவன். அப்பெருமான எனது உரையை தனது உரையாக ஏற்றுக்கொண்டவன். எரியும் நெருப்பினை தனது கைகளில் ஏந்தியவன். பெரியதாகவும் இருக்கும்  நீல மலர்களை உடைய நீர் சுனைகளுக்கு அருகில் வண்டுகள் பாடுகின்றன. நீரில் இருக்கும் குவளை மலர்கள் மகரந்தத்தைப் பொழிகின்றன. அந்த இடம் மிக்க நறுமணம் உடையதாக இருக்கிறது. இவ்வாறான எழில்களை உடைய இலம்பையங் கோட்டுர் தலத்தில் உறையும் ஈசன் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

கருத்து

·  ஈசன், உயிர்களின் தன்மைக்கு ஏற்ப  அவர்கள் விரும்பிய  வடிவம் தாங்கி வருபவன்



பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           8    

பாடல்

கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே

பொருள்


மிகப் பெரியதாக கிளர்ந்து எழுந்த மழையை தன் கைகளால் தாங்கி துயர் துடைத்த திருமாலும், பிரம்மாவும் ஈசனின்  திருவடியையும்  மேல்  முடியையும் தரிசிக்க விரும்பி அதனை அடைய இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த ஈசன் எனது உரையை தனது உரையாக ஏற்றவன். அவன் ஒளிரும் நெருப்பினை தன் கரங்களில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழும் இலம்பையங்கோட்டூரில் உறையும் அப்பெருமான் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

புகைப்படம் : தினமலர்

1 comment:

  1. நேற்று தற்செயலாக இத்தலத்திற்குச் செல்லும் பேறு கிட்டியது.‌உங்களின் இந்தப் பதிவை என் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.‌அருமையான பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete